வீரசிகாமணி குடைவரை
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு அருகேயுள்ள வீரசிகாமணி எனும் ஊரில் முற்காலப் பாண்டியர் காலத்து எட்டாம் நூற்றாண்டு குடைவரையொன்று காணப்படுகிறது. இன்று அக்குடைவரை கைலாசநாதர் கோவிலென அழைக்கப்படுகிறது.
இக்குடைவரையின் பழமையான கல்வெட்டாக சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு(1020-21) குடைவரைத் தூணில் காணப்படுகிறது. இது தமிழ் வட்டெழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. இதில் இவ்வூர் இராஜராஜ பாண்டி நாட்டு முடி கொண்ட சோழ வளநாட்டு கல்லக நாட்டு பிரமதேயம் வீரசிகாமணியான வீரவிநோதச் சதுர்வேதி மங்கலமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் பெயர் கைலாயத்து எம்பெருமான். பாண்டிய நாட்டில் சோழர்கள் பெயர்களிலிருக்கும் ஊர்களில் இதுவும் ஒன்று. ( வீரசிகாமணி முதல் பராந்தகச் சோழனின் விருதுப்பெயர் ). இவ்வூர் இன்றுவரை அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது.
“ஸ்வஸ்தி ஶ்ரீ
கோச்சடையவன்மரா
ய ஶ்ரீ சுந்தர சோழ பாண்டிய தேவர்
க்கு யாண்டு 8 ஆவது இ(ராசராச)ப்பா
ண்டி நாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டு
கல்லக நாட்டு ப்ரஹ்மதேயம் வீரசி…
ன வீரவிநோதச் சருப்பேதி ம….
ஶ்ரீ கையிலாயத்து பெருமான் ….
வ்வூர் இருக்கும் மண்டை … சோ
லை சாத்தன் வச்ச… (நந்தா விளக்கு )
எறு…. வுகாணி ஒன்.. மூ
ன்று ஸந்தியும் இ…..
டு முட்டாமை எரிக்க கடவோ…
இவூர் ஶிவப்ராஹ்மணனெ…..
கணனும்… பாத்தீஶ்வர….
…. பாத்தீஶ்வர …
… ண்யனும்…”
வரிகள் : SII 14
குடைவரையின் வெளிப்புறத்தே விநாயகரும் நின்ற நிலைத் திருமாலும் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது. குடைவரை இரு சதுர அரைத்தூண்களையும் இரு முழுத்தூண்களையும் கொண்டதாகக் குடையப்பட்டுள்ளது. குடைவரையின் துவாரக பாலர்கள் குன்னாண்டார் கோவில் துவாரக பாலகர் அமைப்பினை நினைவுபடுத்துகின்றன. மேலும் சில உருவங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
குடைவரைக்கு அருகிலுள்ள இயற்கைக் குகைத்தளத்தில் சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன. ஒரு படுக்கையில் வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகிறது.( படிக்க இயலவில்லை ). கோவில் அருகிலே பிற்காலத்தைய அமர்ந்த நிலை திருமால் சிற்பம் காணப்படுகிறது.